எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கிம்யா லோடெர்கட்டுரைகள்

ஒரு அன்பான உழைப்பு

டாக்டர் ரெபேக்கா லீ க்ரம்ப்ளர் என்பவரே முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஆவார். எனினும் வாழ்நாள் முழுதும் ((1831–95) அவர் நிராகரிப்பட்டதையும், பொருட்படுத்தப்படாததையும், உதாசீனமாக்கப்பட்டதையும் அவரால் மறக்க முடியவில்லை. அவர் தன்னுடைய குறிக்கோளான மருத்துவத் தொழிலில் அர்ப்பணிப்போடிருந்தார். சிலர் நிறத்தையும், இனத்தையும் கொண்டு இவரை மட்டுப்படுத்தினாலும் "கடமை என்னை எங்கே, எப்போது அழைத்தாலும்; அதைச் செய்யும் புதிதான துணிவையும் ஆயத்தத்தையும் உடையவளாகவே" தாம் இருப்பதாக அவர் கூறுகிறார். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சிகிச்சையளித்ததும் ; விடுதலையான அடிமைகளுக்கு மருத்துவ பராமரிப்பை வழங்கினதும் தேவனுக்கே செய்த ஊழியமாக அவர் நம்பினார். கவலைப்படும் வண்ணமாக, கிட்டத்தட்ட அடுத்த நூற்றாண்டு வரை அவர் தன்னுடைய சாதனைகளுக்காகக் கௌரவிக்கப்படவில்லை. நாமும்கூட நம்மைச் சுற்றியுள்ளவர்களால் புறக்கணிக்கப்பட்டு, குறைவாய் மதிப்பிடப்பட்டு, பாராட்டப்படாமல் இருக்கலாம். எனினும், வேதம் நமக்கு நினைப்பூட்டும் காரியம் யாதெனில், தேவன் நம்மை ஒரு குறிப்பிட்ட பணிக்காக அழைத்தால்; உலகத்தாரால் அங்கீகாரம் பெறுவதையும், பாராட்டப்படுவதையும் நோக்காமல், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்ய” (கொலோசெயர் 3:24) அழைக்கப்படுகிறோம். நாம் தேவனுக்கு ஊழியம் செய்வதை நோக்கினால், கடினமான காரியங்களையும்கூட அவருடைய பெலத்திலும் வழிகாட்டுதலிலும், விடாமுயற்சியுடன் மகிழ்ச்சியோடு செய்து முடிப்போம். அப்பொழுது நாம் உலகத்தாரால் அங்கீகரிக்கப்படுவதைக் குறித்து கரிசனையற்றவர்களாக, கர்த்தராலே மட்டும் உண்டாகும் பலனைப்பெற (வ.23) வாஞ்சையுள்ளவர்களாவோம்.

தேவன் உன்னை அறிந்திருக்கிறார்

ஒரு முறை பள்ளியில் சில பிரச்சனைகளுக்கு பிறகு, என்னை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் என் விரக்தியான முகத்தை மறைக்க முயன்றேன். “என்ன விஷயம்?” என்று என் அம்மா கேட்டார். அவர் மேலும், “அது ஒன்றுமில்லை என்று சொல்வதற்கு முன், நான் உன்னுடைய அம்மா என்பதை நினைவில் வைத்துக்கொள். நான் உன்னைப் பெற்றெடுத்தேன், நீ உன்னை அறிவதை விட உன்னை நான் நன்றாக அறிவேன்” என்று சொன்னார். நான் எப்படிப்பட்டவன் என்பதைக் குறித்த என்னுடைய அம்மாவின் அந்த தெளிவான அறிவு, என்னுடைய துக்கமான நேரங்களில் அவர்களின் ஆதரவு எனக்கு தேவை என்பதை நினைப்பூட்டுகிறது. 

கிறிஸ்தவர்களாகிய நாம், நம்மை நன்றாய் அறிந்த ஒரு தேவனால் பராமரிக்கப்படுகிறோம். சங்கீதக்காரன் தாவீது, தேவன் அவருடைய பிள்ளைகளின் வாழ்வில் கொண்டிருக்கும் அக்கறைக்காக தேவனைத் துதிக்கிறார், “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத்  தூரத்திலிருந்து அறிகிறீர்” (சங்கீதம் 139:1-2). நாம் யார் என்பதையும், நம்முடைய எண்ணம், ஆசை மற்றும் செயல் ஆகியவற்றையும் தேவன் அறிந்திருப்பதால், அவருடைய அபரிவிதமான அன்பு மற்றும் பாதுகாப்பின் எல்லையைத் தாண்டி நாம் எங்கும் செல்ல முடியாது (வச. 7-12). மேலும், “நான்… சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும்” (வச. 9-10) என்று தாவீது பாடுகிறார். வாழ்க்கையில் நாம் எங்கிருந்தாலும், ஜெபத்தில் தேவனை கூப்பிடும்போது, அவர் நமக்குத் தேவையான அன்பையும், ஞானத்தையும், வழிகாட்டுதலையும் தருவார் என்று உறுதியாய் நம்பலாம். 

தேவனில் நம்பிக்கை

பெருந்தொற்று வெகுவாய் பரவிய நாட்களில் டெல்லியில் வசித்த ஷீத்தல் என்ற பெண், உணவில்லாமல் வருமானமில்லாமல் சாலையோரங்களில் ஆதரவற்று கிடந்த மக்கள் மீது பரிவு கொண்டாள். அவர்களின் நிலைமையை அறிந்து 10 பேருக்கு உணவு சமைத்து, அதைக் கொண்டுபோய் கொடுத்தாள். இந்த செய்தி வெகுவாய் பரவியது. சில தன்னார்வு நிறுவனங்கள் அவளுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து, அதின் விளைவாய், “ப்ராஜெக்ட் அன்னபூர்னா” என்ற திட்டம் உருவானது. 10 பேருக்கு உணவளிக்கத் துவங்கிய ஒரு பெண்ணிலிருந்து துவங்கிய இந்த முயற்சி, 50 தன்னார்வ தொண்டர்களுடன் 60,000 தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் பெரிய திட்டமாய் உருவெடுத்தது.
கொரோனா பெருந்தொற்றானது சேவை மனப்பான்மை கொண்ட பல நபர்களை ஒருங்கிணைத்தது. கிறிஸ்துவின் ஒளியை பிரகாசிக்கும் பல வாய்ப்புகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்தது. இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு... உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16) என்று போதிக்கிறார். அன்பு, தயவு, நல்வார்த்தைகள் மற்றும் செய்கைகள் மூலமாக (கலாத்தியர் 5:22-23), கிறிஸ்துவின் ஒளியை நாம் பிரகாசிக்கச் செய்யலாம். இயேசுவின் மூலமாய் நாம் பெற்றுக்கொண்ட ஒளியை அன்றாடம் நம் வாழ்க்கையில் பிரதிபலித்தால்,“பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (மத்தேயு 5:16) செய்யலாம்.
கிறிஸ்துவின் தேவையுள்ள உலகத்திற்கு அவர் நம்மை உப்பாகவும் ஒளியாகவும் வைத்துள்ளதால், இன்றும் என்றும் அவருடைய ஒளியை நம்மில் பிரகாசிக்க பிரயாசப்படுவோம்.

அற்புதமான இரட்சிப்பு

வலைப்பதிவு எழுத்தாளர் கெவின் லின்னின் வாழ்வில் பெரும் வீழ்ச்சி உண்டானது. சமீபத்திய கட்டுரையொன்றில் "நான் என் தலையில் துப்பாக்கி ஒன்றை வைத்து அழுத்தப்போனேன், ஆனால் இயற்கைக்கப்பாற்பட்ட விதமாக தேவன் அந்த அறைக்குள் வந்தார். என் வாழ்விலும் வந்தார். அந்த நொடியில் தேவன் என்றால் யாரென்று அறிந்துகொண்டேன்" என்றெழுதினார். லின் தற்கொலை செய்வதைத் தேவன் தடுத்தார். தேவன் உண்டென்ற நம்பிக்கையை அவருக்குள் ஆழமாய் வேரூன்றச் செய்து, தம் அன்பின் பிரசன்னத்தை அவருக்கு நினைப்பூட்டினார். இந்த வியத்தகு சந்திப்பை தனக்குள் மறைத்துவைப்பதற்குப் பதிலாக தன் அனுபவத்தை உலகத்தோடு லின் பகிர்ந்துகொண்டார். யூட்யூப் சேனல் மூலம் ஊழியம் ஓன்றைத் துவங்கி, தன் மனமாற்ற அனுபவத்தையும், அதுபோன்ற மற்றவர்களின் அனுபவத்தையும் உலகத்தோடு பகிர்ந்துகொள்கிறார்.

இயேசுவின் நண்பனும் சீஷனுமான லாசரு மரித்தபோது, அநேகர் இயேசு தாமதமாக வந்ததாக எண்ணினர் (யோவான் 11:32). கிறிஸ்து வருமுன் லாசரு நான்கு நாட்களாகக் கல்லறையில் வைக்கப்பட்டிருந்தான். ஆனால் அவர் அவனை உயிரோடெழுப்பி, அந்தத் துயரமான நேரத்தை ஒரு அற்புதமான நேரமாக மாற்றினார் (வ. 38). "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா" (வ.40) என்றார்.

தம் ஜீவனைச் சிலுவையில் தியாகமாய்த் தந்து, நமது பாவங்களுக்கான தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டு, லாசருவை மரணத்திலிருந்து எழுப்பியதுபோலவே, நமக்கும் இயேசு புதுவாழ்வளிக்கிறார். நாம் நமது பாவக்கட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருடைய நித்திய அன்பினால் புதிதாக்கப்பட்டுள்ளோம். மேலும் நமது வாழ்வின் போக்கை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுள்ளோம்.

துணிச்சலாய் நிற்பது

இந்திய வரலாற்றில் பெண்களுக்கு அநேக வன்கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பண்டித ரமாபாய் வெட்கப்பட்டு ஒளிந்துகொள்ளாமல், துணிச்சலாய் முன்வந்து, ஆரிய மகளிர் சமாஜத்தை நிறுவினார். பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சமுதாயத் தடைகள் மத்தியிலும் பெண் கல்விக்காகவும், மகளிர் மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டார். அவர் ஒருமுறை, “தேவனோடு முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையில் பயமோ, இழப்போ, வேதனையோ இல்லை” என்று கூறியிருக்கிறார். 

தன் ஜனத்தின் மீது நடத்தப்படவிருந்த இனப்படுகொலைக்கு விரோதமாக பேசுவதற்கு பெர்சிய தேசத்தின் அரசியான எஸ்தர் தயங்கினாள். அவள் பேசுவதற்கு தயங்கினால் அவளும் அவளுடைய குடும்பமும் அழிந்துபோகும் என அவளுடைய மாமன் அவளை எச்சரித்தான் (எஸ்தர் 4:13-14). இது துணிச்சலாய் செயல்படவேண்டிய தருணம் என்று எண்ணி, “நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்” (வச. 14) என்று அறிவித்தான். அநீதிக்கு விரோதமாய் குரல் கொடுப்பதா? நமக்கு பிரச்சனை கொடுக்கிறவர்களை மன்னிப்பதா? இதுபோன்ற சவாலான தருணங்களில், தேவன் நம்மை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது (எபி. 13:5-6). நம்மை மிரட்டும் தருணங்களில் நாம் தேவனின் உதவியை நாடுவோமாகில், “பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை” கொடுத்து நம்மை முடிவுபரியந்தம் நடத்த தேவன் போதுமானவராயிருக்கிறார் (2 தீமோத்தேயு 1:7).     

தேவனில் நம்பிக்கை

2020ஆம் ஆண்டில் ஏறெடுக்கப்பட்ட இந்தியாவின் நடுத்தர வயதுள்ளவர்களைப் பற்றிய ஆய்வில், சராசரியாக இந்தியர்கள் இயந்திர திரை கருவிகளைப் பார்வையிடும் நேரம் தினசரி 2 மணிநேரத்தில் இருந்து 4.5 மணிநேரமாக அதிகரித்துள்ளது. ஆனால் உண்மையைச் சொல்வதென்றால், ஒரு கேள்விக்கான பதிலைக் கண்டறிய கூகிளில் நான் எவ்வளவு தேடுகிறேன் அல்லது நாள் முழுவதும் என் தொலைபேசியில் வரும் உரைகள், அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களின் முடிவில்லாத விழிப்பூட்டல்களுக்கு பதிலளிப்பேன் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இந்த புள்ளிவிவரம் மிகவும் குறைவாய் தெரிகிறது. நம்மை ஒழுங்கமைக்கவும், தகவல் தெரிந்துகொள்ளவும், நம்மில் பலர் கருவிகளையே தொடர்ந்து சார்ந்துகொள்ளுகிறோம்.

கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் ஸ்மார்ட்போனை விட சிறந்த உபகரணங்கள் உள்ளது. தேவன் நம்மை நேசிக்கிறார்; பராமரிக்கிறார். மேலும் நம் தேவைகளுக்காய் நாம் அவரை சார்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறார். நாம் ஜெபிக்கும்போது, “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்” (1 யோவான் 5:14) என்ற நம்பிக்கையுடன் இருக்கலாம் என்று வேதாகமம் அறிவுறுத்துகிறது. வேதத்தை வாசித்து அவற்றை நம் இருதயத்தில் பதிய வைப்பதின் மூலம், சமாதானம், ஞானம், விசுவாசம் போன்ற காரியங்களை அவர் நமக்கு அருளுவார் என்ற நம்பிக்கையுடன் அவரிடத்தில் நாம் ஜெபிக்கலாம் (வச. 15).

சில சமயங்களில் நம்முடைய சூழ்நிலையில் எந்த மாற்றமும் நேராதபோது, தேவன் நம் ஜெபத்தைக் கேட்கவில்லை என்று தோன்றலாம். ஆனால் எல்லா சூழ்நிலையிலும் நம்முடைய தேவைக்காய் அவரை சார்ந்துகொள்ளும்போது, அவர் மீதான நம்முடைய விசுவாசம் பெருகத் துவங்குகிறது (சங்கீதம் 116:2). அவர் நாம் கேட்ட அனைத்தையும் கொடுக்கவில்லையென்றாலும், நம்முடைய தேவைக்கேற்ப காரியங்களை ஏற்ற நேரத்தில் அருளுவார் என்ற விசுவாசத்தில் வளர நமக்கு உறுதுணையாயிருக்கிறது.

சேவை மனப்பான்மை

மெக்சிகோவில் உள்ள ஒரு ஊழிய ஸ்தாபனம் ஒவ்வொரு மாதமும் உள்ளூர்வாசிகளுக்கு, சுமார் 11000கி எடை உணவை இலவசமாய் கொடுத்து உதவுகிறது. அதின் தலைவர், “எவராயினும் இங்கே வரலாம். நாங்கள் அவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்கள் இருக்குமிடத்திலேயே அவர்களை சந்திக்கிறோம். அவர்களின் நடைமுறைத் தேவைகளை சந்திப்பதின் மூலம் அவர்களின் ஆவிக்குரிய தேவையை சந்திப்பதே எங்கள் இலக்கு” என்கிறார். கிறிஸ்தவர்களாய் தேவன் நமக்குக் கொடுத்தவைகளை தேவையுள்ளவர்களுக்குக் கொடுத்து, மக்களை தேவனிடம் வழிநடத்தவேண்டும் என்பதே தேவனுடைய சித்தம். தேவனை மகிமைப்படுத்தும் சேவை மனப்பான்மையை நாம் எப்படி வளர்க்கமுடியும்?
தேவன் நமக்குக் கொடுத்த வரங்களை மற்றவர்களின் பிரயோஜனத்திற்கு பயன்படுத்துவது எப்படி என்று அவரிடம் கேட்பதின் மூலம் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளலாம் (1 பேதுரு 4:10). தேவன் நமக்குக் கொடுத்ததை மற்றவர்களுக்கு அளிக்கையில், “அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலனுள்ளதாயும் இருக்கும்” (2 கொரிந்தியர் 9:12).
மற்றவர்களுக்கு சேவை செய்வது இயேசுவின் ஊழியத்தில் முக்கிய அம்சம். அவர் வியாதியஸ்தரை சொஸ்தமாக்கி, பசித்தோருக்கு உணவளித்தபோது, பலரும் தேவனுடைய நற்குணத்தையும், அன்பையும் ருசித்தனர். நம் ஜனத்தின் மீது அக்கறை கொள்கையில், நாம் அவருடைய சீஷராகிறோம். நம்முடைய கிரியைகளின் மூலம் தேவ அன்பை நாம் பிரதிபலிக்கும்போது, ''மற்றவர்கள் தேவனை மகிமைப்படுத்துவார்கள்'' (வச. 13) என்று அவருடைய ஞானமான யோசனை நமக்கு நினைவூட்டுகிறது. சேவை என்பது சுயதிருப்திக்கானது அல்ல; மாறாக, பிறர் தேவனுடைய அன்பை அறியவும், அவருடைய நாமத்தை தரித்தவர்கள் மூலம் அவர் செய்யும் அதிசயமான நடத்துதலை பிறர் பார்க்கவுமே.

விசுவாசத்தில் வளர்தல்

என் தோட்டக்கலை பயணத்தின் ஆரம்பத்தில், நான் காலமே எழுந்து என் காய்கறி தோட்டத்திற்கு விரைந்தோடி, ஏதாகிலும் புதிதாய் முளைத்துள்ளதா என பார்ப்பேன். ஒன்றுமிருக்காது! “விரைவான தோட்ட வளர்ச்சி” என்று இணையத்தில் தேடுகையில், செடியின் வாழ்நாளில் நாற்று பருவமே மிக முக்கியமென்று கற்றுக்கொண்டேன். இம்முறையை விரைவாக்க இயலாது என அறிந்தவளாக, விண்ணை நோக்கி மண்ணிலிருந்து முளைத்தெழும் தளிர்களின் வலிமையையும், பருவநிலை மாற்றத்திற்கேற்ற அவைகளின் எதிர்பாற்றலையும் வெகுவாய் ரசித்தேன். சில வாரங்கள் பொறுமையாய் காத்திருந்தபின், பச்சை மொட்டுக்கள் மண்ணிலிருந்து வெடித்தெழும்பி என்னை வரவேற்றன.

சிலவேளைகளில், நம் சுபாவத்தின் வளர்ச்சியானது காலப்போக்கிலும், போராட்டத்தின் மூலமாகவும் தான் உண்டாகுமென்று நாம் அறிவதில்லை. அதினால் நம் வாழ்வின் வெற்றிகளையும், அதினால் உண்டாகும் மகிழ்ச்சியையும் சுலபமாக கொண்டாடுகிறோம். யாக்கோபு, “நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, ... அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக்கோபு 1:2-3) என்று நம்மை அறிவுறுத்துகிறார். ஆனால் சோதனைகளைக் குறித்து சந்தோஷப்பட என்ன இருக்கிறது?

சிலசமயம், தேவன் நம்மை சவால்களினூடும், கஷ்டங்களினூடும் செல்ல அனுமதிக்கிறார். அதினால் நாம் அவருடைய அழைப்பிற்கேற்றபடி வனையப்பட முடியும். “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும்” (வச. 4) நம் வாழ்வின் சோதனைகளிலிருந்து நாம் வெளியே வர தேவன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இயேசுவில் உறுதியாய் நாம் நிலைத்திருக்கையில், எத்தகைய சவாலிலும் நீடியபொறுமையாய், வலிமையாக வளர்ந்து முடிவில் ஆவிக்குரிய கனியானது நம் வாழ்வில் மலரக் காண்போம் (கலாத்தியர் 5:22–23). ஒவ்வொரு நாளும் நாம் உண்மையாக செழித்தோங்க தேவையான ஊட்டச்சத்தை, அவருடைய ஞானமே நமக்குக் கொடுக்கிறது (யோவான் 15:5).

தடுமாற்றத்தை கையாளுதல்

காகிதத் துண்டுகள் முதல் ஆயுள்காப்பீட்டு திட்டங்கள் வரை பல்வேறு வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் உலகத்தில் நாம் வாழுகிறோம். 2004ஆம் ஆண்டு “தேர்ந்தெடுப்பில் முரண்பாடு” (The Paradox of Choice) என்ற புத்தகத்தை ஓர் உளவியலாளர் எழுதியிருக்கிறார். அதில்அவர், தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவரின் நல்வாழ்வுக்கும் முக்கியம் என்றாலும் அதிக தேர்வுகள் நம்மை சோர்வுக்கும், உறுதியற்ற தன்மைக்கும் வழிநடத்தும் என்கிறார். தேர்வுகள் குறைவாயிருக்கும் போது, காகித துண்டுகளை தேர்வு செய்வதில் சிரமமில்லாத போதிலும், வாழ்வின் முக்கியமான முடிவுகளை எடுக்கையில் உறுதியற்ற நிலை பெரும் பங்கு வகித்து பாதிப்புக்குள்ளாக்கும். இந்த தீர்மான தடுமாற்றத்தை மேற்கொண்டு எவ்வாறு உறுதியுடன் முன்னேறி இயேசுவுக்காய் வாழ முடியும்? 

கிறிஸ்துவின் விசுவாசிகளாய் தெய்வீக ஞானத்தை நாம் தேடுவது, கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள உதவும். நாம்வாழ்க்கையில் சிறியதோ அல்லது பெரியதோ, எந்த தீர்மானங்களை எடுத்தாலும், “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு” (நீதிமொழிகள் 3:5) என்று வேதம் நமக்கு ஆலோசனைக் கொடுக்கிறது. நம்முடைய சுயதீர்மானங்களை சார்ந்துகொள்ளும்போது, நாம் குழப்பத்திற்குள்ளாகவும், கவலைக்குள்ளாகவும் கடந்து போய் முக்கியமானதை தவறவிட்டு விடுகிறோம். அல்லது, தவறான தேர்வுகளை தேர்ந்தெடுக்கிறோம். எனினும் நாம் பதிலுக்காய் தேவனை சார்ந்துகொள்ளும்போது, அவர் “(நம்) பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (வச.6). நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் எடுக்கும் தீர்மானங்களில் சமாதானத்தையும், தெளிவையும் உண்டுபண்ணுவார். 

நம்முடைய சுயதீர்மானங்களின் சுமையினால் நாம் முடக்கப்படுவதையும், மேற்கொள்ளப்படுவதையும் தேவன் விரும்பவில்லை. நம்முடைய தேவைகளை விண்ணப்பங்களாய் அவருடைய சமுகத்திற்கு கொண்டு வரும்போது, அவர் கொடுக்கும் வழிநடத்துதலிலும், ஞானத்திலும் இளைப்பாறுதலை நாம் பெறுகிறோம்.